லங்கா IOC நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஊடகவியலாளர்கள் இன்று (11) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
”ஒரு பிரச்சினை முடியும் போது, மற்றுமொரு பிரச்சினை உருவாகின்றது. தற்போது யுக்ரேன் ரஷ்யா யுத்தம் ஆரம்பித்துள்ளது. நிவாரணங்களை வழங்க நாம் முழுமையாக முயற்சித்து வருகின்றோம். மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை அவ்வாறே வைத்திருக்குமாறு கேட்கின்றேன். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எமது அமைச்சர்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்”என பஷில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
நாட்டிற்கு வெளியில் நடக்கும் விடயங்கள் காரணமாகவே இவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் இடம்பெறும் சம்பவங்களுக்கு தம்மால் தலையீடு செய்ய முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.
உள்நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு எவ்வாறேனும் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ குறிப்பிடுகின்றார். (TrueCeylon)