அவிசாவளை − பென்றிக் தோட்ட மக்கள், தோட்ட அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.
கொழும்பு − அவிசாவளை பிரதான வீதியின் பென்றிக் தோட்டத்திற்கு செல்லும் வழியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பென்றிக் தோட்டத்தில், பெருந்தோட்ட நிறுவனத்தின் அனுமதியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றை தோட்ட அதிகாரி பலவந்தமாக உடைத்த நிலையில், அதனை தடுத்த வயோதிப பெண்ணொருவர் தோட்ட அதிகாரியால் தாக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, வயோதிப பெண்ணின் மகன்மார், தோட்ட அதிகாரி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த தோட்ட அதிகாரி மற்றும் வயோதிப பெண் ஆகியோர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னர், சிவில் உடையில் பொலிஸார் எனக்கூறிக்கொண்டு சென்ற சிலர், குறித்த வீட்டை மீண்டும் உடைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சம்பவம் குறித்த செய்தி சேகரிப்பிற்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கும் பொலிஸாரினால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது, பொலிஸார் தோட்ட நிர்வாகத்திற்கு சார்பாகவே செயற்பட்டதாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.
எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டை பொலிஸார் நிராகரித்திருந்தனர். (TrueCeylon)